நகர மறுக்கிறது பொழுது…

நகர மறுக்கிறது பொழுது
இன்னும் நெடுநேரம் ஆகும் இரவுக்கு

நித்தியத்தின் வெயிலில் நன்றாக உலர்ந்து
பக்குவம் அடைகிறது அன்றைய இரவு
இன்னும் நேரமாகும் இரவு வர

காற்றைக் கிழவன் வாயால் வெளிப்படுத்திக் கொண்டு
கேட்கப் பிடிக்காத ஒருவனிடம்
மறதியை ஊதி அந்தநாள்க் கதையைக் கூறுகிறான்

குந்திக் குறிவிறைத்த யாளித் தலையிலிருந்து
சாமித் தண்ணீர் கொட்டுகிறது

மாலைக் கூட்டத்தில் பேச்சாளி
மேற்கோள் கட்டுகளை வீசிக் கிளர்கிறான்

காலட்சேபக் கூட்டத்தில்
பிரசங்கிக்கும் பக்தர்க்கும் கூவம்
உடம்பில் கமழ
வத்திப் புகையும் நறுமணப் பூவும்
சுகந்தம் குன்றி செத்துப் போகிறது

தெருவை ஒருமுறை கண்ணால் துழாவி
முன்னேற் பாடாக கக்கூசுக்குப் போன பரத்தை
வந்தது இரவென்று வயதைக் களைகிறாள்

பாடம் மட்டும் மனப்பாட மாகாத சிறுவன்
குழப்பத்துக் கிடையில் தூங்கிப் போகிறான்

சலங்கைக் காலுடன் பாவங்கள் தெருக்கூத்தாடி
அழியாத தங்கள் மேன்மையைக் கூறின.

உலகின்மீது இரவு கவிழ்ந்து அமிழ்கிறது
இரவின் உலுக்குக் காசுகள் உளற
விளக்கம் எழுதினார் இலக்கிய வாதிகள்

ப்ரகாசம் மிகுந்த இரவின் சப்த தாதுக்கள்
யாரையும் எதையும் தன்வச மாக்கின்
தயங்கிய புண்ணியம் கூட
தயங்கிய புண்ணியம் கூட
தயங்கிய புண்ணியம் கூட
பாவத்தைப் பின்பற்றித் தன்னை மொழிந்தது
நான்
நெட்டுயிர்த்து விளக்கை அணைத்தேன்.

1981

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.